பழந்தமிழ் ஆயுதங்கள் (பகுதி 2)
தமிழ் வணக்கம்!!!
பழந்தமிழர்கள்
பயன்படுத்திய வேறு சில ஆயுதங்கள் பற்றி இன்று காண்போம்.
மட்டுவு -
தமிழரின் போர்கருவிகளில் தலைசிறந்த ஆயுதம். இவ்வாயுதத்தின் இரு மான் கொம்புகள்
கேடயத்தால் இணைக்கப்பட்டிருக்கும். இரு முனைகளும் கூர்மையாக சீவப்பட்டிருக்கும்.
மான் கொம்பை கேடயத்தில் இரண்டு பக்கமும் வைத்து சிலம்பாட்டத்தை போல்
சுற்றும்பொழுது, எதிரிகள் தடுமாறுவர். அந்த சுற்றில், எதிரிகள் சுழற்றும் போர்க்கருவிகளை தடுக்கும்
வல்லமை பெற்ற கருவி, மட்டுவு.
உருமி -
உலகிலேயே மிகப்பழமை வாய்ந்த களரி எனும் கலைகளுள், முக்கியமான போர்க்கலை தான், இந்த உருமி.
தொல்தமிழ் சொல்லான உருமி, சுட்டுவாள்(சுழலும் வாள்) என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இதுவரை நாம்
கண்ட போர்க்கருவிகள் கற்றுத்தேர ஓரிரு ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், இக்கருவியை
தேர்ந்து பயன்படுத்த பல ஆண்டுகள் பிடிக்கும். பல்முனை ஆட்களின் தாக்குதல்களை, சுழற்றுதலின்
மூலம் எதிர்கொள்ளக்கூடியது. வலது கையில் உருமியும், இடதுகையில் கேடயமும் கொண்டு போரிடும் வழக்கம்
கொண்டதாக அறியமுடிகிறது.
வல்லயம் /
குத்துவல்லயம் - இது அதிநீளமான ஓர் ஆய்தமாகும்; முனையில் கூரிய கூர்மையுள்ள மிகவும் நீளமான
கையில் வைத்து எதிரியை குத்தும் ஒருவகை ஆய்தம். எட்டத்தில் நின்றபடியே எதிரியை
குத்தி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கூடுதலாக யானைமேல் உள்ளவர்கள்
பயன்படுத்துவார்கள்.
முக்குத்துவாள்
- இது ஒரு வகை வாள்கத்தி. இது பார்ப்பதற்கு ஒரு கத்தி போல் தான் இருக்கும். ஆனால், ஒரு பொத்தானை
அழுத்தினால், பக்கவாட்டில் இருந்து இரண்டு கூடுதலாக கத்திகள் வெளிப்படும். இது
எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாக அறியப்படவில்லை.
குலிசம் - எந்த
ஒரு வலிமையான பொருளையும் உடைத்தெறியும் ஆயுதம். பழங்கதைகளில் இவ்வாயுதம்
கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் இது பற்றிய குறிப்புகள் உண்டு. இவ்வாயுதம்
போரில் சுழன்றதைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை.
நம்
முன்னோர்களின் வீரத்தை என்றும் மறவாமல், நாம் நம் வருங்கால சந்ததியினருக்குக்
கற்றுக்கொடுத்து பாதுகாக்க வேண்டும்.
தமிழ் சார்ந்த
தேடல், தமிழுக்கான
தேடல்!
- சங்கேத் & கிஷோர்






கருத்துகள்
கருத்துரையிடுக