பழம்பெரும் பொருட்கள் (பகுதி 1)
தமிழ் வணக்கம்!!!
இன்று நாம்
செய்யும் அன்றாட வேலைகளுக்கு பல தொழில்நுட்பங்கள் கொண்ட பொருட்களை
பயன்படுத்துகிறோம். ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பு
தொழில்நுட்பம் இல்லாத காலத்தில், சிறு வேலைகள் செய்வதற்கு கூட, நுண்ணறிவோடு தீர்வு கண்டார்கள் பழந்தமிழர்கள். அவற்றுள் சிலவற்றை
இன்று நாம் காணவிருக்கிறோம்.
பறி - இது
வயலில் தண்ணீர் இறைக்கப் பயன்படும் ஒரு கருவி. இது இரண்டு வகைப்படும் - இரும்பு
பறி, தோலினால் ஆன பறி. தண்ணீர் இறைக்க கமலை
பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலும் ஒரு கிணற்றுக்கு ஒரு கமலை தன இருக்கும். பெரும்
கிணறாக இருந்தால் நான்கு கமலைகள் வரை பயன்படுத்தலாம். ஒரு கமலைக்கு, இரண்டு எருதுகள், ஒரு ஆள் தேவைப்படும். இந்த நுட்பம்,
வடக்கயிறு மற்றும் வார்க்கயிறுகள் மூலியமாக அடைய முடியும். கமலையில்
இருக்கும் பறி உருளை கொண்டு வடக்கயிறு மூலியமாக எருதுகளோடு இணைக்கப்பட்டிருக்கும்.
பறியின் அடிபக்கத்தில், வால் எனும் பை போன்ற அமைப்பு
இருக்கும். அது வால்கயிறு மூலியமாக எருதுகளோடு இணைக்கப்பட்டிருக்கும். பறி
கிணற்றுக்கு மேல் வந்தவுடன், அந்த வால் வழியாக, நீர் வாய்க்காலில் விழுவதற்கு தோதாக வால் கயிற்றை இழுப்பார்கள்.
தண்ணீர் வால் வழியாக வாய்க்காலில் விழுந்துவிடும். பின்வரும் காணொளி மூலம் இதை
நன்கு புரிந்து கொள்ள முடியும்.
அடுத்து
ஆட்டுக்கல் மழைமானி - பண்டைய தமிழர்களின் முக்கிய தொழில் வேளாண்மை. நீர் ஆதாரங்கள்
பல இருந்தாலும் மழை பொழிவை வைத்து உழவிற்கு தயாரானார்கள் நம் முன்னோர்கள். மழை
பொழிவை கணக்கிட ஆட்டுக்கல்லை பயன் படுத்தினார்கள். மாவு அரைப்பதற்கு மட்டும் உரல்
பயன்படவில்லை. பண்டைய காலத்தில் அதுதான் நமது மழைமானி. ஆட்டுக்கல் குழியில் நீர்
நிரம்பினால்தால் மழை பெய்ந்ததாக கூறப்படும். இல்லையேல் அது தூறல், சாரல் என்றாகி விடும். எல்லா வீடுகளின் முற்றத்திலும் ஆட்டுக்கல்
இருக்கும். முன்னிரவில் மழை பெய்திருந்தால் ஆட்டுக்கல் குழிக்குள்
நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா
அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர். உரல் குழி மழை நீரால்
நிரம்பி இருந்தால் அது உழவு மழை ஆகும். ஏர் கலப்பையை கொண்டு இலகுவாக மண்ணில் ஓர்
அடி ஆழத்துக்கு உழவு செய்யலாம். மழையின் அளவைப் பொறுத்து ஈருழவோ, ஐந்து உழவோ, பத்து
உழவோ என கணக்கிடுவார்கள். ஐந்து உழவிற்கு மேல் மழை பெய்தால் நதிகளில் நீர் கரை
புரண்டு நகரும். படிப்பறிவு இல்லாமல் நாம் பாட்டனார்கள் தெரிந்து வைத்திருந்த
அனுபவ அறிவு.
இதுமட்டுமல்லாமல்
இன்னும் எண்ணற்ற கருவிகள் நம் பழந்தமிழர்களால் பயன்படுத்தப்பட்டது. இவையெல்லாம்
தற்போதைய அறிவியலுக்கு முன்னோடியாக திகழ்கிறது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல
பொருள்களின் முக்கியத்துவம் அறியாமலும், வரலாறு
தெரியாமலும் அதன் பயன்பாடு புரியாமலும்
இருக்கிறோம். அதில் சிலவற்றை இன்று நாம் கண்டறிந்தோம்.
தமிழ் சார்ந்த
தேடல், தமிழுக்கான தேடல்!




கருத்துகள்
கருத்துரையிடுக